Thursday, May 22, 2014

"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.1



"சாதி," "தீண்டாமை" ... இன்ன பிற -- பகுதி 6.1
--------------------------------------------------------------------------------------------

சென்ற பதிவுகளில் ...

“சாதி” என்ற கோட்பாடு பற்றிப் பழைய தமிழ் இலக்கண இலக்கியங்கள் என்ன தெரிவிக்கின்றன என்று பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html

‘புலை’ என்ற சொல்லைச் சில அகரமுதலிகள் எப்படிச் சொல்லியிருக்கின்றன என்பதையும் பார்த்தோம்http://mytamil-rasikai.blogspot.com/2014/01/2.html

புலையன்’ ‘புலைத்தி’ என்று குறிக்கப்பட்ட மக்களைப் பற்றிச் சங்கப் பாடல்கள் என்ன தெரிவிக்கின்றன என்றும் பார்த்தோம்:  http://mytamil-rasikai.blogspot.com/2014/01/3.html

"உயர்வு, இழிவு, உயர்பிறப்பு, இழிபிறப்பு"  இன்ன பிற கோட்பாடுகளைப் பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/02/4.html 

"இழிந்தோன்உயர்ந்தோன்இழிசினன்இழிபிறப்பாளன்" பற்றிப் பார்த்தோம்: http://mytamil-rasikai.blogspot.com/2014/04/5.html

****************

இந்தப் பதிவில் "தீண்டாமை" என்ற கருத்தைத் தேடுவோம். 

கொஞ்சம் நீளமான பதிவு, அதனால் இரண்டாகப் பிரித்து எழுத விருப்பம். படித்துப் புரிந்துகொள்ளப் பொறுமை தேவை. 

++++++++++++++++++++++++ 

‘தீண்டாமை’ என்றால் யாரோ ஒருவர் இன்னொருவர் மேல் ‘தீட்டு’ இருப்பதாகக் கற்பித்துக்கொண்டு அந்தத் ‘தீட்டுப்பட்டவர்'களைத் தீண்ட விரும்பாத நிலை என்று புரிந்துகொள்கிறேன். 

சங்க இலக்கியத்தில் 'தொடுதல்' என்பதும் 'தீண்டுதல்' என்பதும் வெவ்வேறு பொருளைத்தரும். முதலது ஆண்-பெண் உறவோடு (penetration) 'தோண்டுதல் (digging)' என்ற பொருளையும் தரும். காட்டு: 'பாசியற்றே பசலை ... தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே;' 'குளம் தொட்டு வளம் பெருக்கி ... .' முதலதை விளக்காமல் 'இடக்கரடக்கல்' என்று மறைத்துவிட்டார்கள். 'தீண்டுதல்' என்றால் ஒரு பொருளும் இன்னொரு பொருளும் இடைவெளியில்லாத அணுக்க நிலையில் அமைதல். இதையும் மனதில் கொள்ளவும்.

'தீட்டு' என்றால் என்ன என்று சங்கப்பாடல்களிலிருந்து அறிய முடியவில்லை.

இப்போது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சங்கப்பாடல்களில் 'தீட்டு' என்ற கருத்து எங்கே வெளிப்படுகிறது என்றும் எனக்குப் புலப்படவில்லை. 

இந்த நூற்றாண்டில் எனக்குத் தெரிந்த 'தீட்டு' என்ற கருத்தையோ ‘தீண்டாமை’ என்ற கருத்தையோ சங்கப் பாடல்களில் யான் காணவில்லை. 

'தீட்டு' ‘தீண்டாமை’ பற்றி உங்களுக்குத் தெரிந்த அளவில் சங்க இலக்கியத்தில் விளக்கமோ சான்றோ ஏதேனும் அகப்பட்டால் குழப்பாமல் தெளிவாகச் சொல்லுங்கள். என் கருத்துச் சேவியில் நன்றியுடன் சேர்த்துக்கொள்வேன். 

இக்கால வழக்குப்படித் "தீண்டாமை" என்பது மக்களைப் பற்றியது ஆதலால் ... மக்களின் பெருக்கம், மக்களின் தொழில்கள், மக்களின் இருப்பிடம், மக்களின் செல்வ வளம், ஆண்-பெண் உறவு, இரவலரும் புரவலரும் என்ற கோணங்களில் சங்கப் பாடல்களில் "தீண்டாமையை"த் தேட முயலுகிறேன்.

நிற்க.

1. மக்களின் அடிப்படைப் பிரிவுகளும் அவர் பெருகிப் பல்கியமையும்


சங்கப் பாடல்களில் (எட்டுத்தொகை + பத்துப்பாட்டு) பொதுமக்களின் இயற்பெயர்கள் கிடைப்பது அரிது. மன்னர், அரசர், வள்ளல், புலவர் ஆகியோரின் பெயர்களோடு பெண்களின் பெயர்கள் சில (ஐயை, மருதி, வெள்ளிவீதி, ஆதிமந்தி  என) அரிதாகக் கிடைக்கின்றன. அந்தப் பெயர்களும் ஏதோ ஒரு வள்ளல்/மன்னன்/ஆடுவான் என்று பொது வாழ்வில் புகழ் பெற்ற ஓர் ஆடவனுடன் தொடர்பான பெண்களின் பெயர்களே. 

அதைத் தவிர, மக்களைச் சுட்டும் பெயர்கள் எல்லாமே திணை, நிலம், குடி, கிழமை, தொழில், பண்பு இன்ன பிறவற்றின் அடிப்படையில் உருவாகியதைக் காண்கிறோம். இதை முன்னொரு பதிவில் (http://mytamil-rasikai.blogspot.com/2013/12/1.html) பார்த்தோம்.

இந்தப் பெயர்களில் ‘தீண்டாமை’ என்ற கருத்து இழையோடக்கூட இல்லை. 'புலையன்' என்றால் தீண்டத்தகாதவன், 'பறையன்' என்றால் தீண்டத்தகாதவன் இன்ன பிற கருத்தெல்லாம் இலக்கியச் சான்று இல்லாமல் கற்பித்துக்கொள்ளப்பட்டவை. பிற மக்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்களாகப் பட்டம் கட்டி ஒதுக்கிய நிலையைச் சங்கப்பாடல்களில் காணேன்.

1a. தமிழகத்தில் மக்கள் பெருகிப் பல்கிய நிலையைப் பற்றிய கருத்து இலக்கணத்தில் கிடைக்கிறது. 

தொல்காப்பிய உரையில்: 
 “ கிழவனும் கிழத்தியும் பலவகைப்படுவர். அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மர் ஆவர். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மர் ஆவர். இவரையும் அவ்வந்நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான் நோக்க வரம்பிலர் ஆவர்.”

பாருங்கள். 

அடிப்படைப் பிரிவுகள் (4 வகை)
——————————————
இதை முந்தைய பதிவில் (http://mytamil-rasikai.blogspot.com/2014/04/5.html) சுருக்கமாகப் பார்த்தோம். இங்கே சற்று விரிவாகப் பார்ப்போம்.

A, B, C, D — அந்தணர் (A), அரசர் (B), வணிகர் (C ), வினைஞர் (D) என்று வைத்துக்கொள்வோம். 

அநுலோமர் (6 வகை)
——————————
AB, AC, AD, BC, BD, CD
அந்தணர் குல ஆண் + அரசர் குலப் பெண் —> அநுலோமர் (AB)
அந்தணர் குல ஆண் + வணிகர் குலப் பெண் —> அநுலோமர் (AC)
அந்தணர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (AD)
அரசர் குல ஆண் + வணிகர் குலப் பெண் —> அநுலோமர் (BC)
அரசர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (BD)
வணிகர் குல ஆண் + வினைஞர் குலப் பெண் —> அநுலோமர் (CD)


நில வகைப் பிரிவுகளின்படி மக்கள் வகை (10 x 4)
————————————————————
(அடிப்படை 4 குலம் + அநுலோமர் 6 வகை == 10 வகை) x குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலங்கள் (4) == 40 வகை


ஒவ்வொரு நிலத்திலும் உயிர்களின் பன்மை
—————————————————
40 x ஆயர் குலம் 
40 x வேட்டுவர் குலம்
40 x குறவர் குலம் 
40 x பரதவர் குலம்

******************* 
இதையெல்லாம் இலக்கணத்தில் இவ்வளவு விளக்கமாகச் சொல்லக் காரணம் என்ன? 

பெண்கொடுத்தல், பெண்கோடல் என்ற முறைகளில் தமிழக மரபும் வடக்கத்தி மரபும் வேறுபட்டிருக்கின்றன.

வடக்கத்தி முறை: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தைவம்/தெய்வம், காந்தருவம், அசுரம், இராக்கதம், பைசாசம். இவற்றுள் முதல் நான்கும் (பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தைவம்/தெய்வம்) பெண்ணைக் கொடுக்கும் முறை; இங்கே பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. பின்னவை மூன்றும் (அசுரம், இராக்கதம், பைசாசம்) பெண்ணைக் கொள்ளும் முறை. இங்கேயும் பெண்ணுக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையில்லை. ஏதோ ஒரு போட்டியில் வெற்றி பெற்றுப் பெண்ணை அடைதல், பெண்ணை வலிய எடுத்துச் செல்லுதல், பெண் அசந்து இருக்கும் நேரத்தில் அவளை வலியப் புணர்தல் போன்ற முறைகளே இவை. இடைப்பட்ட ஒன்று (காந்தருவம்) மட்டுமே பெண்ணுக்குத் தன் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்ததைத் தெரிவிக்கிறது. 

தமிழக முறை: களவு, கற்பு. தன் துணையைத் தேர்ந்தெடுக்க ஒரு பெண்ணுக்கு உரிமை இருந்ததைக் களவு என்ற முறை சொன்னாலும், அந்தக் களவு கற்பில் முடிவேண்டும் என்பதே வலியுறுத்தப்படுகிறது. இல்லையென்றால் உடன்போக்கு என்ற முறை அமைந்தது.

தமிழகத்துக் ‘களவு’ என்ற மணமுறை வடக்கத்திக் ‘காந்தருவம்’ என்பதற்கு ஈடானது என்று ஆரிய அரசன் பிரகத்தனுக்கு விளக்க முனைந்த இலக்கியம் கபிலரின் குறிஞ்சிப்பாட்டு. எல்லாருக்கும் இந்தக் களவு-கற்பு முறையை இலக்கண நூல்களாகிய தொல்காப்பியமும் இறையனார் களவியலும் விளக்குகின்றன.

[குறிஞ்சிப்பாட்டைத் தனியாக அலச வேண்டும்.]

களவு என்ற ஒழுக்கத்தில் ஈடுபடத் தொடங்கும் பெண்ணும் ஆணும் எந்தெந்த வகைகளில் ‘ஒத்து’ இருப்பார்கள் என்று தொல்காப்பியர் சொல்கிற போது, அந்த ஆடவன் ‘மிக்கோன் ஆயினும்’ பரவாயில்லை என்றும் சொல்லிவிட்டார். அதைத் தொடர்ந்துதான் அநுலோமக் கருத்து வெளிவருகிறது. 

“இழிந்தானொடு உயர்ந்தாட்கு உளதாகிய கூட்டம் இன்மை பெருவழக்கு “ என்பது உரை. அதாவது, தமிழகத்தில், உயர்ந்த குலத்துப் பெண் ஒருத்தி அவள் குலத்தைவிட இழிந்த குலத்தவனோடு கூடுவது அந்தக் காலத்தில் பரவலாக நடைபெறவில்லை என்று தெரிகிறது. 

‘தீண்டாமை’ என்பது ஒரு தீவிரக் கோட்பாடாக இருந்திருந்தால்  மக்கள் பெருகிப் பல்கியதைக் குறித்த தொல்காப்பியரோ விளக்கம் சொன்ன உரையாசியரோ அந்த மக்களுள் இவர் இவர் இந்த இந்தக் காரணத்தால் 'ஒதுக்கப்பட்டவர்/‘தீண்டத்தகாதவர்’ என்று ஏன் குறிப்பிடவில்லை? 

2. மக்களின் தொழில்கள்


இயற்கை தந்த நிலத்தோடும் நீரோடும் ஒட்டி நிலையாக வாழ்ந்து தொழில் செய்தவர்கள் நெய்தல்நில மக்களும் மருதநில மக்களுமே. இவர்கள் தொழில் செய்த இடங்களின் இயற்கை/செயற்கை மாற்றத்தால் நிலத்தின் கூறும் தொழிலின் நிலையும் மாறுபடும். மற்ற நிலத்து ஆயர், வேட்டுவர், குறவர் எல்லாருமே இடம் பெயர்ந்துகொண்டேயிருக்கவேண்டிய தேவை இருந்திருக்கும், இல்லையா? 

இலக்கியத்தில்
-----------------------

வணிகம்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் ஆகிய புலவர்களின் பெயர்கள் பலருக்கும் பழக்கமானவையே. மாசாத்துவான், மாநாய்கன், கோவலன், சாதுவன், சந்திரதத்தன் என்ற வணிகர்களின் பெயர்கள் சங்கமருவிய சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியங்களில் கிடைக்கின்றன. மணிமேகலையில் காணும் "கம்பளச்செட்டி" என்ற குறிப்பு  கடல் கடந்து கம்பள வணிகம் செய்தவனைக் குறிக்கிறது. 

வேளாண்மை: 
வேள், வேளாண்மை, வேளாளர் (பரிபாடல்), இன்ன பிற.
வேளாண்மை செய்தன கண் (கலித்தொகை)

இதைத் தவிரப் பல்வேறு தொழில் செய்தவர்களைப் பற்றியும் ஏற்றுமதி/இறக்குமதி வணிகம்,   பண்டங்களுக்குக் கரிகாலனின் முத்திரை, சுங்கவரி, நாளங்காடி (பகல் நேரக் கடைத்தெரு), அல்லங்காடி (இரவு நேரக் கடைத்தெரு) இன்ன பிறவற்றைப் பற்றியும் மதுரைக்காஞ்சி (511-522), பட்டினப்பாலை (118-136) போன்ற இலக்கியங்களிலிருந்து அறியலாம்! 


இலக்கணத்தில்
-----------------------
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது … ; வேளாண் பெருநெறி வேண்டிய இடத்தினும் … (தொல்காப்பியம்)

வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை (தொல்காப்பியம்)

தொல்காப்பிய உரையில் காணுவது: உமண் குடி, சேரி, தோட்டம், பாடி என வரும். எயின் குடி, சேரி, தோட்டம், பாடி என வரும். எட்டிப்பூ, எட்டிப்புரவு, காவிதிப்பூ, காவிதிப்புரவு, நம்பிப்பூ, நம்பிப்பேறு என வரும். எல்லாக் கொல்லரும் சேவகரும் தச்சரும் புலவரும் எனவும், எல்லா ஞாயிறும் நாயகரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும். 

இவற்றோடு, கோலிகக் கருவி, வண்ணாரப் பெண்டிர், ஆசீவகப்பள்ளி என்ற குறிப்பும் கிடைக்கிறது.

இங்கே “உமண்” என்பது ‘கிளைப்பெயர்’ என்பதற்கு எடுத்துக்காட்டு. பிற பெயர்களை — எயின், எட்டி, கொல்லர், நாயகர், மணியகாரர், வணிகர், அரசர் ஆகியவற்றை நீங்களே புரிந்துகொள்க. 

3. மக்களின் இருப்பிடம் 


பொதுவாக ... 

மக்களின் உறைவிடங்கள் அந்தந்த நிலத்துக்கு ஏற்றபடிச் செவ்வனே அமைந்திருந்ததை ஆற்றுப்படை இலக்கியங்கள் காட்டுகின்றன. 

ஒவ்வோர் ஆற்றுப்படை இலக்கியத்திலும் பல்வேறு நிலங்களின் அமைப்பும் மக்களின் வாழ்க்கை முறையும் விவரிக்கப்பட்டிருப்பது அருமை.  

ஓர் எடுத்துக்காட்டு:

பெரும்பாணாற்றுப்படை (263-274)
--------------------------------------------------
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇ,

தாழை முடித்துதருப்பை வேய்ந்த

குறியிறைக் குரம்பை, பறியுடை முன்றில்,

கொடுங்கால் புன்னைக்கோடு துமித்து இயற்றிய

பைங்காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,

இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,

புலவு நுனைப் பகழியும் சிலையும் மான,

செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்

மை இருங் குட்டத்து மகவொடு வழங்கி,

கோடை நீடினும் குறைபடல் அறியாத்

தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்

கொடு முடி வலைஞர் குடி

இந்த வகைப் பிரிவுபட்ட உறைவிடங்கள் அவரவர் செய்த தொழில் அடிப்படையில் அமைந்தனவே தவிர, தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற அடிப்படையில் அமையவில்லை. 


இலக்கணத்தில்
———————
ஒவ்வொரு திணைக்கும் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) உரிய ‘கருப்பொருள்’ என்று தொல்காப்பியம் (அகத்திணையியல் 20) குறிப்பவை: தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, தொழில், யாழ் என்பவை.

“தெய்வம் உணாவே மா மரம் புள் பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கரு என மொழிப”

இதைச் சற்றே விளக்கமாக முதலில் தெரிவிப்பது இறையனார் களவியல் உரை. இறையனார் களவியல் உரையில் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய கருப்பொருள் பட்டியலைக் காண்கிறோம். 

இங்கே குறித்துக்கொள்ள வேண்டியவை இரண்டு:

1. தொல்காப்பிய நூற்பாவில் மக்களைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் இறையனார் களவியல் உரை மக்களையும் சுட்டி, அதில் தலைமகன், தலமகள், மக்கள் என்ற பிரிவையும் குறிக்கிறது. 

2. பறையடித்தவரும் யாழிசைத்த கலைஞரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் என்ற குறிப்பு எங்குமேயில்லை. எல்லா நிலத்திலும் அங்கே நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் மக்கள் பறை முழக்கம் செய்திருக்கிறார்கள், யாழிசைத்திருக்கிறார்கள். அந்தந்த நிலங்களில் பறை முழக்கம் செய்த எல்லாரும் பறையரே, யாழிசைத்த எல்லாரும் பாணரே, துணங்கை போன்ற கூத்தாடிய எல்லாரும் கூத்தரே. சேர மன்னன் ஒருவன் தன் போர் வெற்றிக்குப் பிறகு துணங்கைக் கூத்துக்குத் தலைக்கை தந்தான் என்று அவனுடைய மனைவி ஊடல் கொண்டமையை ஒரு புலவர் பாடுகிறார். (இதைப் பற்றிய என் பதிவை இங்கே பார்க்கலாம்: http://mytamil-rasikai.blogspot.com/2010/12/blog-post_31.html )


இலக்கியத்தில்
——————
பட்டினம், பாக்கம், சேரி, குடி, ஊர், தெரு, மறுகு, நகர், பாடி, இருக்கை, பதி, என்று பல வகை இடங்கள் இருந்ததாகத் தெரிகிறது. ‘வீதி’ என்ற சொல் சிலப்பதிகார, மணிமேகலைக் காலத்திலிருந்து வழக்காறு பெறுகிறது; ஆனால், சங்கப் பாடல்களில் ஒரு பெண்ணின் பெயரில் (வெள்ளிவீதி) மட்டுமே 'வீதி' என்ற சொல் காண்கிறது. 

இந்தச் சொற்களில் ஒவ்வொன்றும் சங்க இலக்கியங்களில் எவ்வாறு புழங்குகிறது என்று ஆய்வதே முறை. அதை ‘விரிக்கின் பெருகும்’ என்பதனால் அந்த வகை ஆய்வு இங்கே இல்லை.

பொதுவாகவும் சுருக்கமாகவும் சொன்னால்  
  • பட்டினம், பாக்கம் இரண்டும் நெய்தல் நிலத்து இடங்களாகவும் கடல் தொடர்பான வணிகம் நிகழ்ந்த இடங்களாகவும் தெரிகிறது. 
  • ஊர், பதி என்பவை உள்நாட்டிலும் கடல் அல்லது நீர்ப்பரப்பு சூழந்ததுமான இடங்களிலும் இருந்தவை எனத் தெரிகிறது. 
  • யானையும் தேரும் செல்லும் வழி தெரு; பாம்பும் தெருவில் வழங்கியிருக்கிறது (குறுந்தொகை).
  • வணிகமும் பிற செயல்களும் நிகழும் இடம் மறுகு
  • ஊருக்குள்ளேயோ தொட்டடுத்தோ சேரி, குடி, நகர் என்பவை மக்கள் குழுக்களாக வாழும் இடமென்றும் தெரிகிறது. குடி என்பது குறிஞ்சி நிலத்திலும் இருந்திருக்கிறது.
  • இருக்கை என்பது ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபட்டவர்களின் தற்காலிகமான (temporary) நிலை என்பது-போலத் தெரிகிறது. மன்னனோ, வள்ளலோ மக்களைப் பார்ப்பதற்கும் பரிசில் வழங்குவதற்கும் என்று அமர்ந்திருந்த நிலை, பிற்காலத்தில் ‘திருவோலக்கம்’ என்று குறிக்கப்பட்ட நிலை, போல இருந்திருக்கலாம். 
  • பாடி என்பது போர்க்காலத்தில் காட்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மிகப் பெரிய பரந்த இருப்பிடம் என்பது தெரிகிறது. இந்தப் ‘பாடி’ என்ற சொல்லுக்குப் ‘பாசறை’ என்று உரைகாரர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள். முல்லைப்பாட்டு உரை காண்க. அதோடு, சென்னை அகரமுதலியின் பொருளும் காண்க. 
    • [பாடி¹ pāṭi
    • , n. < படு-. [T. pāḍu, K. M. pāḍi.] 1. Town, city; நகரம். பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 2. Hamlet; quarters; சேரி. (திவா.) 3. Pastoral village; முல்லைநிலத்தூர். (திவா.) 4. District; நாடு. (யாழ். அக.) 5. See பாடிவீடு. பாடி பெயர்ந் திட்டான் பல்வேலான் (பு. வெ. 3, 10). 6. Army, troop; சேனை. (திவா.) 7. Armour, coat of mail; கவசம். (அக. நி.) 8. Spy; உளவாளி. (W.)]
  • ஆனாலும் பாருங்கள், ‘பாடி’ என்ற சொல் ‘தீண்டாமை’ என்ற கோட்பாட்டைக் காட்டவில்லை! பெரியபுராண நந்தனின் புலைப்பாடிக்கு எப்போது ‘தீட்டு’ உண்டானதோ தெரியவில்லை!
நிற்க.


'சேரி' என்ற சொல்லுக்குச் சிறப்பிடம் கொடுத்து அதன் வழக்காற்றைப் பார்ப்போம், ஏனென்றால் அந்தச் சொல்தான் காலப்போக்கில் உருவான ‘தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டாமை’ என்ற கோட்பாடுகளைச் சங்க இலக்கியத்தில் புகுத்திக் காண்கிறவர்களுக்கு விருந்து! 

சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி விடை காண முயலுவோம். 

1. சேரி என்பது என்ன?

2. அது எங்கே அமைந்திருந்தது?

3. சேரியில் யார் வாழ்ந்தார்கள்? என்ன தொழில் செய்தார்கள்? 

4. சேரியில் மக்களின் போக்குவரத்து எப்படிப்பட்டது?

5. சேரியில் வாழ்ந்தவர் வறுமையில் வாடினார்களா?  

6. சேரியின் சூழ்நிலையால் சேரி மக்கள் தாழ்ந்தவர்களா?

+++++++++++++++
சங்க இலக்கிய வழக்காறுகளில் சில இங்கே:

1. ‘சேரி’ என்பது என்ன? 

இதற்குக் குறைந்தது இரண்டு உரையாசிரியர்கள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். 
  • நற்றிணைக்கு உரையெழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சொன்னது: “பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி.” நற்றிணை 77, 331 காண்க.
  • தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் சொன்னது: “சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல் அதனைப் ‘பார்ப்பனச்சேரி’ என்பது.” 
ஆகா! இதுவே ‘சேரி’ என்பது இழிந்தோர்/தாழ்ந்தோர்/ஒதுக்கப்பட்டோர்/தீண்டத்தகாதவர் வாழுமிடம் என்ற கருத்தைச் சட்டென வெட்டுகிறது!


2. ‘சேரி’ என்பது எங்கே அமைந்திருந்தது?

சில எடுத்துக்காட்டுகள்:
உறைக்கிணற்றுப் புறச்சேரி (பட்டினப்பாலை: 76)
புறஞ்சேரியிறுத்த காதை (சங்க மருவிய சிலப்பதிகாரக் காதை ஒன்றின் தலைப்பு)
ஓரூர் வாழினும் சேரி வாரார் (குறுந்தொகை 231:1)
மையீர் ஓதி மடவோய், யானும் நின் சேரியேனே, அயலிலாட்டியேன் (அகநானூறு 386:10-11)
தமர் தமர் அறியாச் சேரி (நற்றிணை 331:12)
[பின்னத்தூரார் உரை: பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி. அவரே ‘ஆங்கண்’ என்பதுக்கு ‘ஊர்’ என்று பொருள் கொண்டு, ‘ஊரிலுள்ள சேரியெனக் கூட்டுக’ என்கிறார்!]
 ஊரலஞ்சேரிச் சீறூர் (நற்றிணை 77:8)
[பின்னத்தூரார் உரை: பல வீடுகள் சேர்ந்திருப்பது சேரி.]


2a. முதலில் சங்க மருவிய சிலப்பதிகாரக் குறிப்பைத் தெளிவுபடுத்திவிடுவோம். காதையின் தலைப்பில் ‘புறஞ்சேரி’ என்று இருக்கிறதே தவிர, காப்பிய வரிகளில் இல்லை! காப்பிய வரிகளில் உள்ளது ‘புறஞ்சிறை,’ ‘புறச்சிறை’ — “அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் புறஞ்சிறைப் பொழில் (13:195; 14-1); அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் (15:7-8). அறத்துறை மாக்கட்கல்லது இந்தப் புறச்சிறை இருக்கை பொருந்தாது (15:107-108).

[‘புறஞ்சிறை,’ ‘புறச்சிறை’ என்பவை அறம் செய்யும் அறவோர் நிறைந்த இடம் என்று தெரிகிறது.’ அது தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் வாழும் இடம் என்று சொல்லமுடியுமா?] 


2b. “உறைக்கிணற்றுப் புறச்சேரி” என்ற பட்டினப்பாலை வரியைக் கொண்டு ‘சேரி என்பது ஊருக்குப் புறத்தே, தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் வாழ்ந்த இடம்’ என்று முடிவு கட்டுவது மிகப்பெரும் தவறு. “புறச்சேரி” என்பது சேரியின் இட அமைப்பைக் குறிப்பது உண்மை. ஆனால் அது மக்களின் தாழ்ச்சியையோ ஒதுக்கப்பட்டமையையோ தீண்டாமையையோ குறிக்கவில்லை. 

[‘உறை’ என்பது சுட்ட களிமண்ணால் ஆன, தேவையான உயரமும் விட்டமும் கொண்ட வளையம். ’உறைக்கிணறு’ என்பது பல உறைகள் இறக்கப்பட்ட கிணறு. இது கரிகாலன் ஆண்ட காவிரிப்பூம்பட்டினத்தின் தொழில்நுட்பத்தைச் சுட்டும் மிகச் சிறந்த குறிப்பு. நெய்தல் நிலத்தில், பட்டினக்கரையில் குடிநீருக்காக உறையிட்டு அமைக்கப்பட்ட கிணறுகள் அன்றைக்கு இருந்தமைக்கு இது வலுவான சான்று. பிற நிலத்து மக்களுக்கு அருவி, ஆறு, சுனை, குளம் போன்ற நீர்நிலைகள் இருக்க நெய்தல் நில மக்களுக்கு உப்பில்லாத குடிநீர் கிடைக்க இந்த உறைக்கிணறுகள் பயன்பட்டிருக்க வேண்டும். உறையின் களிமண் கடல்நீரை வடிகட்டும் கருவியாக அமைந்திருக்கும். இது கரிகாலனின் திறமையை எடுத்துச் சொல்லுகிறது. கல்லணை கட்டிய சோழத்திறமை அல்லவா!

இன்றைக்கும் சாயல்குடி என்ற ஊருக்கு அருகே ‘உறைக்கிணறு’ என்ற இடம் இருக்கிறது என்பதை இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளலாம். தினமலர்ச் செய்தியிதழ்ப் பதிவு ஜூன் 21, 2010. 20-ஆம் நூற்றாண்டில் நகர்களிலும் வீட்டிற்குள் கடின உறைகள் (cement/concrete rings) இறக்கி உறைக்கிணறு அமைத்தார்கள்.]


2c. “ஓரூர் வாழினும் சேரி வாரார்” என்ற குறுந்தொகை (231:1) வரி ஒரே ஊரில் தலைமகனும் தலைவியும் வாழ்ந்தாலும் அவன் அவளுடைய சேரிக்கு வருவதில்லை என்று சொல்கிறது. இது மருதநிலத்தில் ஊரும் சேரியும் ஒருங்கே இருந்தமைக்குச் சான்று.


2d. “மையீர் ஓதி மடவோய், யானும் நின் சேரியேனே, அயலிலாட்டியேன்” என்று மருதநிலத்தில் தலைவியிடம் பரத்தை சொல்கிறாள் (அகநானூறு 386:10-11). தலைவியும் பரத்தையும் ஒரே சேரியில் அண்டைவீட்டுக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது! சேரியில் வாழ்ந்தவர்கள் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்றால் அங்கேயிருந்த பெண்களுடன் உறவாடிய பரத்தனை என்ன வகையில் அடக்கலாம்???

ஆக, ‘சேரி’ என்பது தாழ்ந்தவருக்கு/ஒதுக்கப்பட்டவருக்கு/தீண்டத்தகாதவருக்கு என்று அமைந்த தனி இடம் என்ற கருத்து எவ்வளவு தவறு என்பது வெளிப்படை.


3. சேரியில் வாழ்ந்தவர் யார்? அவர்கள் என்ன தொழில் செய்தார்கள்?



மீன் சீவும் பாண்சேரியொடு, மருதம் சான்ற தண்பணை (மதுரைக்காஞ்சி: 269-270)
[பொருள் வெளிப்படை.]

 வாலிழை மகளிர் சேரி (நற்றிணை 380:5)
  [பின்னத்தூரார் உரை: தூய இழையணிந்த பரத்தையர் சேரி. 
அப்படி என்றால் வாலிழை மகளிர் எல்லாரும் பரத்தையரா? அகநானூற்றுப் பாடலில் (86:12) குறிக்கப்படும் “வாலிழை மகளிர்” பரத்தையரா? இப்படியெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.]

 பாடுவார் பாக்கம் கொண்டென, ஆடுவார் சேரி அடைந்தென (பரிபாடல் 7:31-32)
[பாடுகிறவர்கள் வாழும் பாக்கத்தை வளைத்து, ஆடுகிறவர்கள் வாழும் குடியிருப்பை (வையைப் புனல் அடைந்தது).]

 “… கொற்சேரி, நுண்துளைத் துன்னூசி விற்பாரின் …” (சங்க மருவிய ஐந்திணை ஐம்பது: 21)

[கொல்லர்கள் வாழும் குடியிருப்பு.]

பரதவர் சேரி (சிலப்பதிகாரம்)

தொல்காப்பிய உரையில் உமண் சேரி, எயின் சேரி என்ற எடுத்துக்காட்டுகளைக் காண்கிறோம்.

இந்தச் சான்றுகளைப் பார்த்தால், மீன் பிடித்த பாணர், பரதவர், உமணர், எயினர், ஆடுகிறவர் (ஆண் + பெண்), கொல்லர் இன்ன பிற மக்கள் சேரிகளில் வாழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அதோடு, முன்னர்க் குறிப்பிட்டவாறு “சேரி என்பது பலர் இருப்பதுமன். ஆயினும், ஆண்டுச் சில பார்ப்பனக் குடி உளவேல் அதனைப் பார்ப்பனச்சேரி என்பது” என்ற தொல்காப்பிய உரையே போதும் — சேரிகளில் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற கருத்தை மறுக்க. 


4. சேரியில் மக்கள் போக்குவரத்து எப்படிப்பட்டது?

சேரியில் யார்யார் போய்வரலாம் என்ற கட்டுப்பாடு இருந்ததாகத் தெரியவில்லை. “தமர் தமர் அறியாச் சேரி” என்ற நற்றிணை (331:12) வரி அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போனார்கள் என்று குறிக்கிறது.

ஆனாலும், இங்கே கலித்தொகைப் பாடல் (65) ஒன்று சிந்திக்கத்தக்கது. சுருக்கமாகச் சொல்கிறேன். 

நல்ல இருட்டு நேரத்தில் தலைவன் வரவுக்காக ஒருத்தி காத்திருக்கிறாள். அப்போது அங்கே ஒரு "முடமுதிர் பார்ப்பான்" வருகிறான். தலைவியைப் பார்த்து ‘இந்த நேரத்தில் இங்கே நிற்கிற நீ யார்’ என்று அவளிடம் கேட்டுவிட்டுத் தம்பலம் கொடுக்கிறான். அவள் தான் ஒரு பிசாசு போல நடிக்கிறாள். பார்ப்பான் அஞ்சுகிறான். அவள் அவன்மேல் மணலை வாரித் தூவுகிறாள். அவன் பதறி அரற்றுகிறான். புலியைக் கொள்ளுவதற்கு என்று விரிக்கப்பட்ட வலையில் ஒரு குறுநரி சிக்கியது-போல இருந்தது அந்த அவலம். 

இந்த நிகழ்ச்சியை “எந்நாளும் தன் தொழில் அவ்வாறு தனிநிற்கும் மகளிரைக் கண்டால் தன் காமவேட்கையாலே மேல்விழுதலாகக் கொண்ட முதிய பார்ப்பானுடைய விரும்பு” என்று ‘உச்சிமேல் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் உரைக்கிறார்! இந்தக் கலித்தொகைப் பாட்டைப் புனைந்தவரும் புகழ்பெற்ற ஓர் அந்தணப் புலவரே — கபிலர்!

[எழுத்தாளர் ஜெயகாந்தனின் படைப்பான கங்காவின் மாமா ('சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற கதையில்) நினவுக்கு வருகிறது. சில பிறவிகள் காலந்தோறும் அப்படித்தான் இருக்கும்-போல!!]

இங்கே சிந்திக்கவேண்டியவை பல. 

  • சேரி என்பது பரத்தையர் சேரியானால், ஒரு (முடமான கிழட்டுப்) பார்ப்பானுக்கு அங்கே என்ன வேலை, அதுவும் இருட்டு நேரத்தில்? 
  • சேரி என்பது தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் இருப்பிடமானால் அங்கே போய்விட்டுவரும் பார்ப்பான் அந்தத் தீட்டை எப்படிப் போக்கிக்கொள்வான்? அவனுடைய சாத்திரம் அவனுக்குக் கழுவாய் சொல்கிறதா? 
  • ‘சேரியில் தீட்டு’ என்று ஒருபக்கம் சாய்ந்த முடிவு ஏன்? அங்கே போன பார்ப்பானுக்குச் ‘சேரித்தீட்டு’ ஒட்டாதா??? கங்கையில் போய்க் குளித்துவிட்டா தன் வீட்டுக்குள் நுழைவான்?!
  • கள்ளமிலாச் சீதையையும் இறைப்பற்றில் தன்னை இழந்த நந்தனையும் தீயில் சுட்டுப் புடம் போட்ட இந்திய-தமிழகக் குமுகங்கள் கலித்தொகைப் பார்ப்பான் போன்றவர்களையும் பிற பரத்தனையும் பொசுக்கிப் புடம் போடாமல் மறுபடியும் தெருவில் உலவ விட்டது ஏன்

5. சேரியில் வாழ்ந்தவர்கள் வறுமையில் வாடினார்களா?

சேரிமக்கள் வறுமையில் வாடியதற்குச் சான்று இல்லை. [உங்களுக்குச் சான்று தென்பட்டால் தெரிவிக்கவும் நன்றியுடன் ஏற்றுக்கொள்வேன்.] அவரவர் தத்தம் தொழிலைச் செய்துகொண்டு மிகக் களிப்போடு வாழ்ந்தார்கள் என்றுதான் தெரிகிறது. 

சில எடுத்துக்காட்டு மட்டும் இங்கே:

துணங்கையம் தழூஉவின் மணம் கமழ் சேரி (மதுரைக்காஞ்சி: 329)
[துணங்கைக் கூத்து நிகழ்கின்ற நறுமணம் கமழும் குடியிருப்பு.]

 மல்லலம் சேரி (நற்றிணை 249:9)
[வளம் மிகுந்த குடியிருப்பு.]

 சேரிக்கிழவன் மகளேன் யான் (கலித்தொகை 117:6)

[சேரியில் முதல் உரிமை படைத்தவனின் மகள் பெருமையாகத் தன்னைப் பற்றிச் சொல்லும் இடம் இது.]

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஒரு புலவர். இந்தப் புலவர் தாழ்ந்தவரா? ஒதுக்கப்பட்டவரா? தீண்டத்தகாதவரா?


6. சேரியின் சூழ்நிலையால் சேரி மக்கள் தாழ்ந்தவர்களா?

கோழியும் பன்றியும் ஆடும் மீனும் இறைச்சியும் புலாலும் நிறைந்த காரணத்தால் சேரியில் வாழ்ந்தோர் தாழ்ந்தவர்/ஒதுக்கப்பட்டவர்/தீண்டத்தகாதவர் என்ற முடிவுக்கு வரமுடியாது. அதே போல இறைச்சியும் நாயும் பன்றியும் காணாத இடத்தில் வாழ்ந்தவர் உயர்ந்தவர் என்றும் சொல்ல முடியாது. நாயும் பன்றியும் துன்னாத பதியில் வாழ்ந்த மறைகாப்பாளர் (பெரும்பாணாற்றுப்படை 297-301) மறைகளைக் காக்கவேண்டிச் செய்த வேள்வியில் பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியைப் புழங்கிய நிலையை எப்படிப் புரிந்துகொள்வது? மோரும், வெண்ணெயும், மாதுளையும், மாவடுவும் உண்ட காரணத்தினால் அவர்கள் உயர்ந்தவர்களாகிவிடுவார்களா? 

இந்தச் சான்றுகளே போதும்  “சேரி என்றால் தாழ்ந்த/ஒதுக்கப்பட்ட/தீண்டத்தகாத மக்கள் இருந்த இடம்” என்ற கருத்தை மறுக்க! என்ன சொல்கிறீர்கள்? 

(தொடரும்)

3 comments:

  1. அண்டை மாநிலமான கேரளத்தில் தலைச்சேரி, வடக்கன்சேரி, கச்சேரி, பொரத்திசேரி, சாலிசேரி, முல்லைசேரி, கூர்க்கன்சேரி என சேரிகள் பல்கிய சேரநாடு என கூகுள் வரைபடங்களில் காணலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்! மதுரைப் பக்கமும் விளாச்சேரி உண்டு. பாண்டிச்சேரி/புதுச்சேரி எல்லாரும் அறிந்ததே.இன்னும் தேடினால் நிறையத் தகவல் கிடைக்கும்.

      Delete
  2. ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
    Christian church untouchablity
    http://marayar.blogspot.in/

    ReplyDelete